புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!
‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளில் இந்த மருந்து மனிதர்களுக்கு மிகுந்த பாதுகாப்பானது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு செல்லாமல் இந்த மருந்து பாதுகாக்கிறது. நமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு ஆற்றலை, புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட வைத்து அவற்றை அழிக்கச் செய்கிறது ‘எண்டெரோமிக்ஸ்'.
ஏற்கெனவே உள்ள கரோனா கொவிட்-19 தடுப்பூசி/தடுப்பு மருந்தைப் போலவே, இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தும் அதேபாணியில் எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
ரஷியாவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி ரேடியாலஜிக்கல் மையம், இங்கெல்ஹார்ட் மாலிகுலர் பயாலஜி நிறுவனத்துடன் (இஐஎம்பி) இணைந்து இம்மருந்தை தயாரித்துள்ளது.
இந்த மருந்தை பரிசோதனை அளவில் பயன்படுத்திய மனிதர்களுக்கு பெரியளவிலான இணை பாதிப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மருந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடலில், புற்றுநோய் வகைகளைப் பொறுத்து அவ்வகை செல்களின் அளவு முன்பிருந்ததைவிட 60 முதல் 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மருந்தை தயாரிக்க கடந்த 3 ஆண்டுகளாக தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இப்போது அம்மருந்து பயன்பாட்டுக்கு தயாராக இருப்பதாகவும், அடுத்தகட்டமாக அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ரஷியாவின் தேசிய மருத்துவம் மற்றும் உயிரியல் முகமை (எஃப்எம்பிஏ) தலைவர் வெரோனிகா வோர்ட்சோவா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரஷிய சுகாதார அமைச்சகம் அடுத்தடுத்த வாரங்களில் இம்மருந்தின் தரவுகளை ஆராய்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலரெக்டல் புற்றுநோய்
க்லியோ-பிளாஸ்டோமா(மூளை புற்றுநோய்)
மெலனோமா உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களைத் தடுப்பில் இந்த மருந்து மிகுந்த பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நோயாளியின் உடல்நலன், அவர்களின் மரபணு சார்ந்து, பிரத்யேகமாக மேற்கண்ட எண்டெரோமிக்ஸ் தடுப்பு மருந்து அந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க எச்பிவி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், அதேபோல, ப்ரோஸ்டேட், பிளாடெர் புற்றுநோயைத் தடுக்க தெரபேடிக் தடுப்பூசிகள் உள்ளன. எனினும், புற்றுநோய்க்கெதிரான அவற்றின் செயல்திறன் குறைவாகவே இருக்கிறது.
இந்த நிலையில், எம்-ஆர்என்ஏ அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்தான ‘எண்டெரோமிக்ஸ்' இப்போது பயன்பாட்டுக்கு வரவிருப்பது புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
ரஷியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புற்றுநோய் தடுப்பு மருந்து, உலகம் முழுவதும் புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது.