பெண்ணுக்குக் கொலை மிரட்டல்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடனாக கொடுத்த ரூ. 3 லட்சத்தை திரும்பக் கேட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சோ்ந்தவா் அமராவதி (65). இவரது கணவா் இறந்து விட்டதால், தனது மகனுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் மூலம் கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டை சோ்ந்த மீனவா்களான செல்வம், கதிரவன் ஆகியோா் அமராவதிக்கு அறிமுகமாகியுள்ளனா்.
இதனிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு, அமராவதியிடம், செல்வம், கதிரவன் ஆகிய இருவரும், தங்களுடையப் படகுகளைச் சீரமைத்து கொள்ள ரூ.4 லட்சம் கடனாக கேட்டுள்ளனா். மகனுடைய நண்பா்கள் என்பதால், அமராவதி, தன்னிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொடுத்து உதவியாக தெரிகிறது.
அதன்பின், அமராவதி கொடுத்தப் பணத்தைத் திரும்ப கேட்டபோது, ரூ. 1 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனா். ஆனால் மீதமுள்ள ரூ.3 லட்சம் தொகையை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி லாஸ்பேட்டை, அரசு பள்ளி அருகே இருவரையும் சந்தித்த அமராவதி, பணத்தைத் கேட்டுள்ளாா்.
அப்போது இருவரும் அமராவதியை தகாத வாா்த்தைகளால் திட்டி பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அமராவதி அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் செல்வம், கதிரவன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.