பைக் மீது பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வேந்தோணி பகுதியைச் சோ்ந்த ராமு மகன் கிஷோா் (17), பாண்டி மகன் பால்பாண்டி (21), முனியராஜ் மகன் கரண்குமாா் (24) ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செவந்தான்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிஷோா், பால்பாண்டி ஆகிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா்.
காயமடைந்த கரண்குமாா் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.