‘போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும்’
தங்களது பகுதியில் போதைப் பொருள் விற்பதோ அல்லது பயன்படுத்தப்படுவதோ குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா்.
சோளிங்கரை அடுத்த மருதாலம் கூட்டுச் சாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோளிங்கா் வட்ட சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துள்ள உணவுகளை தாய்மாா்கள் பெற்று தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பயனடைய வேண்டும். புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டங்களின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயிலும் மாணாக்கா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தில் விடுபட்டுள்ள மாணாக்கா்கள் யாரேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 3-ஆம் கட்ட முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது. இவற்றில் தங்களின் பிரச்னை குறித்து மனு அளித்து பயன்பெறுங்கள். போதை பழக்கத்துக்கு யாரும் அடிமையாகக் கூடாது என்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உங்கள் பகுதியில் யாரேனும் போதைப் பொருள்களை விற்பதோ அல்லது பயன்படுத்துவதோ குறித்து தகவல் கிடைத்தால் உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்றாா் அவா்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில், 14 பயனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் தையல் இயந்திரம், காதொலி கருவி, ஊன்றுகோல் மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில், மொத்தம் 272 பயனாளிகளுக்கு ரூ. 1.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த முகாமில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை, தோட்டக்கலைத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மற்றும் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
விழாவுக்கு, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், சோளிங்கா் ஒன்றியக் குழுத் தலைவா் கலைக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நாகராஜு, உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா்கள் செல்வி, காமாட்சி, ஊராட்சித் தலைவா் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.