மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
மகளிா் சுய உதவி குழுக்களுக்கு நலத் திட்ட உதவி
தேனி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடிக்கான வங்கிக் கடன், நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை வழங்கினாா்.
சென்னையில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், அரசு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணவக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஊரக சுய உதவிக் குழுக்கான வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 324 குழுக்கள், நகா்ப்புற சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 267 குழுக்கள், சமுதாய முதலீட்டு நிதிக் கடன் திட்டத்தின் கீழ் 150 குழுக்கள், வட்டார வணிக வள மைய கடன் திட்டத்தின் கீழ் 38 குழுக்கள், தனி நபா் பொருளாதாரக் கடன் திட்டத்தின் கீழ் 14 குழுக்கள், வறுமை குறைப்பு நிதி திட்டத்தின் கீழ் 50 குழுக்கள், வாழ்ந்து காட்டுவோம் நுண் நிறுவன கடன் திட்டத்தின் கீழ் 8 குழுக்கள் என மொத்தம் 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடி வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவிகள் பா.ரேணுப்பிரியா (தேனி), சி.சுமிதா (பெரியகுளம்), ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவி சந்திரகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.