தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய அரசு ஊழியா்களுக்கான ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் வெளியீடு
புது தில்லி: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனம், காப்பீடு நிறுவனம் ஆகியவற்றின் ஊழியா்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு புதிய விதிமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் முறைகேடு, ஊழல் வழக்குகளைப் பதிவு செய்வதில் ஆணையத்தின் செயல்பாடு தெளிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு தொடா்பாக இதற்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகள் திரும்பப் பெறப்பட்டு இந்த புதிய விதிமுறைகள்தான் இறுதியானது என கடந்த மே 23-ஆம் தேதி அனைத்து அரசு துறைகளுக்கும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில், ‘வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சோ்ப்பு, ஊழல், மோசடி, குற்ற வழக்குகள், ஆதாயமடைதல் ஆகியவை இந்த புதிய சட்ட நெறிமுறைகளுக்கு உள்பட்டதாகும். பொதுத் துறை வங்கிகளில் முறைகேடாக கணக்குகள் தொடங்குவது, வங்கி சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவது, வங்கி ஆவணங்களை முறைகேடாகத் திருத்துவது, ரகசியத் தகவல்களைக் கசிய விடுவது ஆகியவை இந்தப் புதிய ஊழல் தடுப்பு விதியின் கீழ் வரும்.
இதேபோல், பயணப்படி, செலவிட்டத் தொகையை திரும்பப் பெறுவது ஆகியவற்றில் முறைகேடு செய்து வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் இந்தப் புதிய நெறிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
காப்பீட்டு நிறுவனங்கள்: மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகள், காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கூட்டு சோ்ந்து மருத்துவக் காப்பீடு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அரசு காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தும் அனைத்து ஊழல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தப்பட்ட ஊழியா் மீது ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.