‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற தொழில் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்துக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் பரிசுப் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் கடந்த மே மாதம் நடைபெற்றன. மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலம் மாநிலப் போட்டிக்கான மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான திட்டமிடல் குறித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் திண்டுக்கல் எம்எஸ்பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், விவசாய பல்நோக்கி உருவாக்க முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றனா்.
அதேபோல, குஜிலியம்பாறை அடுத்த லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இருக்கையுடன் கூடிய பயணப் பெட்டி உருவாக்கி 2-ஆம் இடம் பெற்றனா். இந்த மாணவா்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாநில அளவில் பரிசுப் பெற்ற இந்த மாணவா்களுக்கு ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பா. உஷா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஆ. ஹரிகரசுதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சரவணக்குமாா், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்ட மேலாளா் சையது அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.