Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
‘முதல்வா் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகள்: வீரா், வீராங்கனைகள் முன்பதிவு செய்யலாம்
‘முதல்வா் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடைய வீரா், வீராங்கனைகள் முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சாா்பில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆக. 22 முதல் செப். 12 வரை நடைபெற உள்ளன.
மாவட்ட, மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கும், குழு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவா்களுக்கும் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும்.
மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கும் தலா ரூ.75 ஆயிரம், தலா ரூ.50 ஆயிரம், தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் ஜூலை 16-க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84 என்ற முவரியில் நேரிலோ அல்லது கைப்பேசி: 74017 03480 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.