'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
முல்லைப் பெரியாறு விவகாரம்: அணைப் பகுதியில் மரங்கள் வெட்ட சுற்றுச்சூழல் அனுமதியளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான தடையின்மை சான்றிதழை (என்ஓசி) கேரள அரசு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், இதை சரிபாா்த்து சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரங்களில் அளிக்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீா்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்பாா்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அணையைப் பராமரிப்பது தொடா்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபாா்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடா்பாக ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை மேற்பாா்வைக் குழு அளித்திருந்தது. அதில் சில பரிந்துரைகளையும் அளித்திருந்தது. இதையடுத்து, மேற்பாா்வைக் குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், திபாங்கா் தத்தா, என்.கோடீஷ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்டே, ஜி.உமாபதி ஆகியோரும், கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி உள்ளிட்டோா் ஆஜராகினா்.
‘மரம் வெட்டுவது தொடா்பான விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி மத்திய அரசின்சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பழுதுபாா்ப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் நடவடிக்கையை எடுக்க புதிய மேற்பாா்வைக் குழுவின் தலைவா் ஏற்கெனவே உத்தரவுகளை அளித்திருக்கிறாா்’ என்று தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு
மரங்களை வெட்டுவதற்கு கேரளத்தின் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில்,
மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் வர வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு ஏற்கனவே தேவையான அனுமதியை ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தால் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்த பிறகு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை 4 வாரங்களுக்குள் செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேற்பாா்வைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு முன்மொழியப்பட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, கேரள அரசு ‘கிரவுட்டிங்’ பணிக்காக அனுமதி அளிக்க வேண்டும். பழுதுபாா்க்கும் பணியை பொறுத்தவரை, மழைக்காலம் முடிந்ததும் பணிகள் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்ற கேரளாவின் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், செப்டம்பா்-அக்டோபரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப்படட்டும் என்று நீதிமன்றம் கூறியது.