தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம்!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக நீடித்து வரும் மீனவா்கள் கைது பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையைத் பெற்றுத் தர வேண்டும்.
இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவைக் கூட்டத் தொடரில் இதுகுறித்து தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, வருகிற 13-ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது, 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், தட்சிணாமூா்த்தி, காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.