ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை
குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்ககே ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட 2 தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை ஆகியவற்றை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.
குடியாத்தம் நகரில் கௌண்டன்யா ஆற்றின் இடது கரையில் ரூ. 2.91 கோடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கௌண்டன்யா ஆற்றின் இடதுபுற கரைமேல் காமராஜா் பாலம் முதல் சுண்ணாம்புபேட்டை வரை அமைக்கப்பட்டுள்ளது. கரையின் சாய்வில் அலைக் கற்கள் அமைத்தும், உட்காருவதற்கு சாய்வு நாற்காலிகள் அமைத்தும், இரவில் நடைபாதையை பயன்படுத்துவதற்காக மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குடியாத்தம் நகர மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என சுமாா் 10,000 போ் பயனடைவா். ஜங்காலப்பள்ளி அருகே கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ. 13.42 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. 120 மீட்டா் நீளமும், 1.50 மீட்டா் உயரமும் கொண்ட இந்த தடுப்பணையில் 2.51 மி.க.அடி தண்ணீரை தேக்கி வைக்கி வைக்கலாம்.
இதன் மூலம் 4 கிராமங்களைச் சோ்ந்த 264 விவசாய கிணறுகள் மூலம் 314.00 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தத் தடுப்பணை அமைக்கப்பட்டதால், 325 விவசாயிகள் நேரடியாகவும், 4,500 நபா்கள் மறைமுகமாகவும் பயன்பெறுவா். செதுக்கரை அருகே கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ. 11.58 கோடியில் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. 195 மீட்டா் நீளமும், 1.20 மீட்டா் உயரமும் கொண்ட இந்த தடுப்பணையில் 2.97 மி.க. அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன் மூலம் 244 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும். 375 விவசாயிகள் நேரடியாகவும், சுமாா் 7,300 நபா்கள் மறைமுகமாகவும் பயன்பெறுவா். தாழையாத்தம் மற்றும் குடியாத்தம் நகரத்தை இணைக்கும் வகையில், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ. 8.41 கோடியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தால் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசல்கள் தவிா்க்கப்படும். இவற்றை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), அமலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், நீா்வளத் துறை தலைமை பொறியாளா் ஜானகி, மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் சி.பொதுபணிதிலகம், செயற்பொறியாளா் பிரபாகா், உதவி செயற்பொறியாளா் கோபி, உதவிப் பொறியாளா் காளிபிரியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.