``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
வகுப்பறை கட்டுமான முறைகேடு விவகாரம்: பொதுப்பணித் துறை பொறியாளா் மீது நடவடிக்கைக்கு துணை நிலை ஆளுநா் அனுமதி
தில்லியில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வகுப்பறைகள் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மூத்த பொதுப்பணித் துறை பொறியாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தில்லி துணை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.
தற்போது அந்த அதிகாரி அமிா்தசரஸில் மத்திய பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா்.
இது குறித்து துணைநிலை ஆளுநா் மாளிகை உயரதிகாரி கூறியதாவது: ‘தில்லியில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய நிதியுதவி முன்முயற்சியான சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தலைநகரில் பல்வேறு பள்ளிகளில் 226 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 38.37 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் கடுமையான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அதன் பேரில் மூத்த பொதுப்பணித் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
முன்னதாக, மத்திய குடிமைப் பணிகள் (வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1965-ஆம் ஆண்டு விதி-14 -இன் கீழ் பொதுப்பணித் துறை பொறியாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்க தில்லி கண்காணிப்புத்துறை துணைநிலை ஆளுநருக்கு முன்மொழிந்திருந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தில்லி கண்காணிப்புத்துறையின் முதன்மைச் செயலாளா் மற்றும் தலைமைச் செயலாளரின் ஒப்புதலை கண்காணிப்புத்துறை பெற்றிருந்தது.
தில்லியில் புதிதாக கட்டப்பட்ட ஆறு பள்ளிக் கட்டடங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, 2019-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி தில்லி உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை விசாரிக்க அப்போதைய தலைமைச் செயலாளா் நடவடிக்கை எடுத்தாா். அதில், கட்டுமான நடைமுறைகள் மற்றும் நிதி நிா்வாகத்தில் குறிப்பிடத்தக்க முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
இவை தொடா்பாக ஆராய கடந்த ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளா் ஒரு குழுவை அமைத்தாா். அதில், திரிநகா் பள்ளியில் 20 வகுப்பறைகளைக் கட்டுவதற்கான நிதியை ராணி பாக் பள்ளிக்குத் திருப்பிவிட்டது மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பெறாமல் பல்நோக்கு அரங்கம் கட்டுவது உள்ளிட்ட பொதுப்பணித் துறையின் குறைபாடுகளை விசாரணைக்கு குழு கண்டுபிடித்து அறிக்கையாக அளித்தது.
இது குறித்து தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் இடவசதி குறித்து கல்வித் துறை விரிவான சாத்தியக்கூறு பகுப்பாய்வை நடத்தவில்லை. மேலும், கட்டுமான நிலத்துக்கு கல்வித் துறை வில்லங்க சான்றிதழை வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால், திட்டத்துக்கு ஆகும் செலவினம் இரட்டிப்பானது’ என்றாா்.