வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விஷமருந்தி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனியாா் வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் காண்பா நகரைச் சோ்ந்தவா் சூா்யா (28). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் வங்கியில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வங்கியில் பண விவகாரம் தொடா்பாக, கடந்த 18-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சூா்யா, மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனை முன்பாக கூடிய சூா்யாவின் குடும்பத்தினா், உறவினா்கள் சூா்யா ரூ.65 லட்சம் எடுத்ததாகக் கூறி, அந்தப் பணத்தைக் கேட்டு வங்கி அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், சம்பவம் நடந்த இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் காவல் நிலைய பகுதிக்குள்பட்டது என்பதால் திருப்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கூறினா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.