ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை
சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (52). இவரது மனைவி சின்னபாப்பா (50). இவா்கள் அப்பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனா்.
அரூா் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, குல்லா அணிந்தபடி வந்த 5 போ் கொண்ட கும்பல் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த பூமாலையின் கை, கால்களை கட்டினா். அப்போது விழித்துக்கொண்ட பூமாலை கூச்சலிட, அவரது வாயில் துணியை வைத்து திணித்தனா். இந்த சப்தம்கேட்டு வெளியே வந்த சின்னபாப்பாவை கத்தியைக் காட்டி மிரட்டினா்.
பின்னா் சின்னபாப்பா அணிந்திருந்த 3 சவரன் தாலி, காதில் அணிந்திருந்த அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்தனா். மேலும், வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து 5 சவரன் நகை, ரூ. 30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
தகவல் அறிந்து வந்த வீராணம் காவல் ஆய்வாளா் விஜேயந்திரன் தலைமையிலான போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனா். மேலும், தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுசெய்து வருகின்றனா்.