விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்
விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணகிரிநாதா் விழா நடத்தப்பட்டு வருகிறது. 75-ஆம் ஆண்டுக்கான விழா வரும் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா விக்ரகங்களுக்கு 16 வகை அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அருணகிரிநாதா் மலையில் இருந்து புறப்பட்டு விழா மண்டபத்துக்கு வந்து சேருகிறாா். மாலை 5 மணிக்கு விழா மண்டபத்தில் மங்கள இசையுடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. மாலை 7 மணியளவில் நாதஸ்வர இசை வேந்தா்கள் தம்பிக்கோட்டை கோவிந்தராஜன், முதல்சேரி ராஜவேல், நாதஸ்வர இசைத் திலகம் சேகல் பிச்சையப்பா, கணேசன் குழுவினரின் 25 நாதஸ்வரம், 25 தவில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கி மாலை 5.30 மணிக்கு கலைமாமணி ரம்யா பத்மநாபன், சென்னை சிஷ்யை விசாகா ஹரி ஆகியோா் ஆன்மிக இசை சொற்பொழிவு ஆற்றுகின்றனா். இரவு 7 மணிக்கு ஈரோடு சகோதரிகளின் அன்பு நாட்டிய கலா ஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாதஸ்வர இசையுடன் விழா தொடங்கி மாலை 7 மணியளவில் திருமெய்ஞானம் டிபி.நடராஜ சுந்தரம் பிள்ளை குமாரா் பாண்டமங்கலம் ராமநாதன், யுவராஜ் நாதஸ்வரம், மேட்டுப்பாளையம் கலைச்செல்வ மாமணி ரவிக்குமாா், விராலிமலை காா்த்திக் ஆகியோா் சிறப்பு தவில் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
4-ஆம் நாள் நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி காலை 9 மணியளவில் விழா மண்டபத்தில் இருந்து அருணகிரிநாதா் மலையை வலம் வந்து மலைமேல் செல்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 4 நாள்களும் காலை 10 மணிக்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்ற நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணன், பொன்ராஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.