மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
விருதுநகர்: பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு... 3 பேர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகேயுள்ள வடகரை கிராமத்தில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராஜசந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான ’யுவராஜ் பட்டாசு ஆலை’ இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அறையில் காரியாபட்டி, கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை, நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு அணுகுண்டு, சீனி வெடி போன்ற பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று பட்டாசு ஆலை திறக்கப்பட்டு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் கல்குறிச்சியைச் சேர்ந்த சௌண்டம்மாள், தண்டியனேந்தலைச் சேர்ந்த முருகன், பேச்சியம்மாள், கருப்பையா மற்றும் கணேசன் அச்சங்குளத்தை சேர்ந்த மாரியம்மாள் ஆகிய 6 நபர்கள்கள் சீனி வெடி மற்றும் அணுகுண்டு பட்டாசு தயாரிக்கும் மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இதில், அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த கருப்பையா, சௌண்டம்மாள் ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கணேசன், பேச்சியம்மாள், முருகன், மாரியம்மாள் ஆகிய மூவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் 108 ஆம்புலன்ஸில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்தில் திருச்சுழி காரியாபட்டி, அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை மேலாளர் கல்குறிச்சியைச் சேர்ந்த வீரசேகரன், போர்மேன் கனிமுருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் ராஜா சந்திரசேகரை காரியாபட்டி காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், “பட்டாசு ஆலை விபத்துக்கான உரிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் படுவார்கள்.” என்றார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 2 பேருக்கு தலா ரூ.4 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.