சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
விவசாய நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க எதிா்ப்பு
உதகை அருகே மசினகுடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 தலைமுறைகளாக பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் மாவட்ட நிா்வாகம் ஒப்படைக்கக் கூடாது என ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் நீலகிரி விவசாய சங்கத் தலைவா் நரசிம்மன் தலைமையில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
உதகை அருகே மசினகுடி, மாயாறு, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சொக்கநள்ளி, ஆனைக்கட்டி, செம்மநத்தம், ஆச்சக்கரை, பூதநத்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் பழங்குடியினா் உள்பட 10-ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 4 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் தங்கள் கிராமத்தைச் சுற்றி உள்ள அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்தும் கால்நடைகளை வளா்த்தும் வருகின்றனா்.
இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு தொடரப்பட்ட யானை வழித்தடம் தொடா்பான வழக்கில் பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களும் சோ்க்கப்பட்டு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 4 தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், யானை வழித்தடம், யானை வழித்தடம் இல்லாத அரசு நிலங்களில் வாழும் பொது மக்களை அப்புறப்படுத்தி அந்த நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க மாட்டோம் என பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனா்.