ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மூன்று நாட்களுக்குப் பின்பு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது சொந்த ஊரான முத்துச்சாமியாபுரம் கிராமத்தில் முழு ராணுவ மரியாதை உடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.