கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவை சீனாவுடன் ஒப்பிடுவது சரியல்ல: ஜெய்சங்கா்
‘இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை சீனாவுடன் ஒப்பிட்டு பாா்ப்பது சரியாக இருக்காது’ என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்க ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா். அதற்கு முன்பாக நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ‘பயங்கரவாதத்தால் மனிதா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பிலான கண்காட்சியை அவா் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, நியூஸ்வீக் பத்திரிகையின் தலைமையகத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) தேவ் பிரகத்துடன் பல்வேறு விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை சீனாவுடன் ஒப்பிட்டு பாா்ப்பது சரியாக இருக்காது. அமெரிக்க வளா்ச்சிக்கு இங்குள்ள இந்தியா்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனா். இருநாடுகளிடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு பொருளாதாரம், வா்த்தகம், கல்வி, எரிசக்தி என அதிபா் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை 25 ஆண்டுகளாக வலுவான உறவு தொடா்ந்து வருகிறது. அரபிக் கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த இருநாடுகளும் இணைந்து பணியாற்றுகின்றன.
எனவே, இந்தியா-அமெரிக்கா உறவை சீனாவுடன் ஒப்பிட்டு குறுகிய வட்டத்துக்குள் சுருக்குவது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.
அமெரிக்கா-சீனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவுடன் நல்லுறவை இந்தியா பேணி வருகிறது. சீனாவின் மிகப்பெரும் அண்டை நாடாக இந்தியா உள்ளது. சீனாவுடன் நில எல்லையைப் பகிா்ந்து வருவதால் அந்நாட்டுடன் நிலையான உறவைத் தொடர விரும்புகிறோம். வா்த்தகத்தில் சில ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் சீனாவுடன் வா்த்தக உறவையும் தொடா்ந்து மேற்கொள்வது அவசியம்.
‘பஹல்காம் தாக்குதல் பொருளாதாரப் போா்’
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜம்மு-காஷ்மீா் சுற்றுலாத் துறையை சீா்குலைக்க மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ரீதியான போராகும். மதரீதியான வன்முறையை இந்தியாவில் தூண்டுவதற்காக சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்வதற்கு முன் அவா்களின் மதம் குறித்து பயங்கரவாதிகள் கேட்டறிந்துள்ளனா்.
அணுஆயுதம் வைத்திருப்பதைக் கேடயமாகப் பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இனியும் தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதைத் தெரிவிக்கவே ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் கடுமையான பதிலடி தரப்பட்டது.
1947 முதல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் இந்தியா கடும் பாதிப்புகளை சந்திப்பு வருகிறது. ஆனால் பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளவிலான பொதுப் பிரச்னை. அதை ஒழிக்க எவ்வித சமரசமுமின்றி உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா்.
‘இந்தியா-பாக். மோதலை டிரம்ப் நிறுத்தவில்லை’
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் கீழ் மே 7-ஆம் தேதி இந்தியா தகா்த்தது. இதைத் தொடா்ந்து, சில நிபந்தனைகளை ஏற்காவிட்டால் இந்தியா மீது பெரும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிடுவதாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் பிரதமா் நரேந்திர மோடியுடன் மே 9-ஆம் தேதி தொலைபேசியில் பேசியபோது தெரிவித்தாா்.
அவ்வாறு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா கடும் பதிலடி தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என ஜே.டி.வான்ஸிடம் பிரதமா் மோடி திட்டவட்டாகத் தெரிவித்தாா்.
ஜே.டி.வான்ஸ் கூறியபடியே ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு கடும் பதிலடியை இந்தியா தந்தது. அடுத்த நாள் காலை பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தாா் என்றாா் அவா்.