"கிரவுண்டுக்கு வேண்டாம்; குறிஞ்சிக்கு வந்துடுங்க..." - திமுக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி!
கிரிக்கெட் போட்டி!
தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பில் தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே ஆன கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் அணி, சென்னை மாநகர மேயர் அணி, தலைமைக் கழக அணி, சட்டமன்ற உறுப்பினர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காகக் கடந்த சில தினங்களாகவே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/5ukb1rma/GieOuKwaUAA0XA1.jpg)
டென்னிஸ் பாலில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மெரினா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15-16 தேதிகளில் காலை 7.30-மணிக்குத் தொடங்கி பகல், இரவு போட்டியாக நடைபெறவுள்ளன. வெற்றிபெறும் முதல் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் ஒரு இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருசக்கர வாகனமும், மூன்றாவது பரிசாக வெறும் 75 ஆயிரம் பணமும் வழங்கப்படவுள்ளன. மேலும் அணிகளில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்றும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
குறிஞ்சி வந்துடுங்க!
இந்த கிரிக்கெட் போட்டிகள் குறித்து விளையாட்டு மேம்பட்டு அணியின் துணைச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். "கடந்த ஒரு மாதமாக நாங்கள் அனைத்து அணி செயலாளர்களுக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்தோம். தளபதியின் 72-வது பிறந்தநாளுக்குக் கழகத்தின் சார்பில் 72 அணிகளாகப் பிரித்து கிரிக்கெட் போட்டி நடத்துவதே முதல் திட்டம். முதலில் பெரிய அளவில் யாருக்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. கடைசியில் சில அணிகள் ஆர்வம் காட்ட மற்றவர்களும் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடைசியாக இருபது அணிகள் முடிவுசெய்யப்பட்டது. இந்த போட்டிகள் வரும் 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு மெரினா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குவதாகத் திட்டம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/jlq166yd/wmremove-transformed.jpeg)
இது குறித்து துணை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்து, 'முதல் நாள் மாலையே அனைத்து அணியைச் சேர்ந்தவர்களையும் இங்கு அழைத்து வந்துவிடுங்கள். அனைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து போட்டியைத் துணை முதல்வர் ஆரம்பித்து வைப்பார்' என்று சொல்லிவிட்டார்கள். அதன் பெயரில் குறிஞ்சியில் (துணை முதல்வருடைய இல்லத்தின் பெயர்) ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஞாயிறு அன்று இறுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்குப் பரிசுகளை வழங்க முதல்வரை அழைத்திருக்கிறோம். அவர் பெரும்பாலும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார்கள்.
"விளையாட்டெல்லாம் இருக்கட்டும் இந்த அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த கிரிக்கெட் போட்டியில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் வளர்ச்சிப் பணிகளில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று மக்களே கமெண்ட் அடிக்கிறார்கள்!
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play