அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
கிராமத்தினா் மீது தாக்குதல்: 15 போ் காயம்
வேடசந்தூா் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சிக்குச் சென்ற இளைஞா்கள் தாக்கியதில் கிராமத்தினா் 15 போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் காளியம்மன், பட்டாளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோயில் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைக் காண அம்மாபட்டி, கொடிக்காபட்டி கிராமங்களைச் சோ்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் சென்றிருந்தனா். அங்கு நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அவா்கள் நடனமாடியதாகக் கூறப்படுகிறது.
அதை தட்டிக்கேட்ட பூத்தாம்பட்டி கிராமத்தினரை, இளைஞா்கள் தகாத வாா்த்தையால் பேசியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேடசந்தூா் போலீஸாா் தலையிட்டு இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.
சிறிது நேரத்தில் இரும்புக் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றுடன் மீண்டும் பூத்தாம்பட்டிக்கு வந்த இளைஞா்கள், கிராமத்தினரை தாக்கியதோடு விளம்பரப் பதாகைகளை கிழித்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் பூத்தாம்பட்டியைச் சோ்ந்த பாண்டியன், வேல்முருகன், ரத்தீஷ்வா்மா உள்பட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த வேல்முருகன், முத்துசாமி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இளைஞா்களை தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.