இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!
கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
திருச்சி லால்குடியைச் சோ்ந்த சண்முகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறக்குறைய 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி ஆனந்திமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கான நீரேற்றுக் குழாய்கள் அமைக்கப்படுவது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீரேற்றுக் குழாய்கள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கும் வழங்கப்படுகிறது என்றாா்.
இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் குடிநீா்த் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூா்வமாக அறிக்கையாக மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.