சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளினால் மண்டல அதிகாரி தனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க மறுப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், "வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை தேடியபோது அது காணாமல் போனது தெரிய வந்தது. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு விண்ணப்பித்தபோது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, 4 வாரங்களில் சீமானுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.