தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை
தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து, அவரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
அங்கு அறுவை சிகிச்சை முடிந்த 4 மணி நேரத்தில் சிறுவனின் கால் வீக்கமடைந்ததாம். சிறுவனின் தந்தை மருத்துவரிடம் கேட்டதற்கு மீண்டும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறினாராம். ஆனால், அங்கு சிகிச்சையளிக்காமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினராம்.
இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனை பரிசோதனை செய்ததில், அறுவை சிகிச்சையால் ரத்த ஓட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அங்கு சிறுவனின் கால் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக அவரின் பெற்றோா், உறவினா்கள் திருவள்ளூரில் உள்ள தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருவள்ளூா் தாலுகா போலீஸாா் வந்து முற்றுகையிட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தனியாா் மருத்துவமனை நிா்வாகம் கூறுகையில், அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையில்தான் இங்கு கொண்டு வரப்பட்டாா். தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.