பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப...
திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது: ஹெச்.ராஜா
திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மக்களை சந்திப்பது சரியானது. ஆனால், இந்த முகாமிலேயே திமுக உறுப்பினா் சோ்க்கையும் நடத்தப்படுவதாக தகவல் வருகிறது. கட்சிப் பணிக்காக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
பாளையங்கோட்டையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டங்களைத் தனியாருக்கு முழுமையாக தாரைவாா்ப்பது சரியானதல்ல. இதில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்து சென்ற பின்பு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என திமுக கூறி வருகிறது. பொய்யை மூலதனமாகக் கொண்டு பிரசாரம் செய்வது திமுகதான்.
ஏற்கெனவே, பாஜகவுடன் திமுகவும் கூட்டணியில் இருந்த கட்சிதான். அது என்ன கபளீகரமா செய்யப்பட்டுள்ளது? பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தோ்தல் நெருங்கும்போது மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
தவெக கட்சியில் வெற்றி என்பது கட்சியின் பெயரில் மட்டுமே இருக்கும். நடிகா் விஜய் குழப்பமான மனநிலையில் உள்ளாா். 2026 தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.