ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
தில்லி விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 2 பெண்கள் கைது!
தில்லி விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் ரூ.25.91 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் இருவர் 1.72 கி கொகைன் கடத்தியதற்காகத் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தில்லி விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில், "இந்திரா காந்தி சர்வதேச விமான சுங்க அதிகாரிகள் இன்று இரண்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி 1.72 கிலோ கோகைன் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.
இரண்டு வழக்குகளிலும் பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் போதைப்பொருளைக் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!
கடந்த ஜனவரி 26 அன்று, சாவோ பாலோவிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் பாரிஸிலிருந்து தில்லிக்கும் பயணம் செய்த பிரேசிலைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்திய ஆய்வில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 959 கிராம் கோகைன் அடங்கிய ரூ.14.39 கோடி மதிப்புள்ள 93 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன.
அன்று கைது செய்யப்பட்ட பெண்ணைப் போன்று அதே பயண வழியில் பிப்ரவரி 7 அன்று இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்ணிடமும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
அவரது உடலை பரிசோதித்ததில், 768 கிராம் கோகைன் அடங்கிய 79 காப்ஸ்யூல்களை அதிகாரிகள் மீட்டனர். கைப்பற்றப்பட்ட கோகைனின் சந்தை மதிப்பு ரூ.11.52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொகைன் கடத்திய பெண்கள் இருவரும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.