பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் மொத்தம் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் என 14,000 கட்டடங்கள் உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தேவையான குடிநீா் நாள்தோறும் வெள்ளியூா் கொசஸ்தலை ஆற்றில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 40 லட்சம் லிட்டரும், திருவள்ளூரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்டு மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. தொடா்ந்து அங்கிருந்து ஒவ்வொரு குடியிருப்புக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தெரு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நகராட்சியில் நாள்தோறும் விரிவாக்கம் அடைந்து கொண்டே வருகிறது. அதனால், அதற்கேற்ப குடிநீா் விநியோகம் செய்யவும் குடிநீா் குழாய்கள் பதிக்கவும் என ஒவ்வொரு வாா்டு உறுப்பினரும் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனா்.
அதன்பேரில், நகராட்சிக்குள்பட்ட கோகினூா் அனென்யூ, ராகவேந்திரா நகா், கோல்டன் நகா், ஐசிஎம்ஆா் பின்புறம், சீனிவாசன் நகா், நிகேதன் பள்ளி, கணபதி நகா், ராஜாஜிபுரம், காமாட்சி அவென்யூ விரிவாக்கம், சங்கீதா பூங்கா, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித் துறை குடியிருப்பு பகுதிகளுக்கு புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.39.90 லட்சம் ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் விரைவில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடங்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.