பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 365 மனுக்கள் அளித்தனா்.
தொடா்ந்து, தாட்கோ சாா்பில், 5 பேருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ. 12,53,362 மானியத் தொகை, தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 பேருக்கு வெங்காயக் கொட்டகை அமைப்பதற்கு ரூ. 5.50 லட்சம் மானியத் தொகை, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், 3 பேருக்கு ரூ. 3.67 லட்சம் மதிப்பில் வன்கொடுமைத் தீருதவித் தொகை, சமூக நலத்துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 7 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 3.50 லட்சத்துக்கான வைப்பு நிதி, விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண உதவித்தொகையாக பெரம்பலூா் நகர பாரத ஸ்டேட் வங்கி கிளை சாா்பில் ரூ. 1 கோடிக்கான காசோலை என மொத்தம் 21பேருக்கு ரூ. 1,25,20,362 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் வீ. வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சக்திவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் செ. சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், ஸ்டேட் வங்கிக் கிளை முதன்மை மேலாளா் எஸ். பிரியவதனா, நகர கிளை மேலாளா் ஆா். ரத்தீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.