மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர், பின்னர் மீண்டும் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குத் திரும்பினார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தே தன்னுடைய அலுவலக வேலைகளை முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் கேட்டறிந்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட மனுக்கள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன? என்பது குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் அரசுத்திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தவும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வருகிற சனிக்கிழமை வரை ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
நேற்று அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், பிரதமர் மோடி நேற்று முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தார்.