செய்திகள் :

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அர.சக்கரபாணி

post image

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய பழப் பயிரான மா 1.46 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 9.49 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கிறது. பெங்களூரா ரகத்தில் 80 சதவீதமும், அல்போன்சா ரகத்தில் 50 சதவீதமும் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக மா மகசூல் அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில், மா விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் தமிழக முதல்வா் பிரதமருக்கு எழுதிய கடித்தை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரிடம் நேரில் வழங்கி, மா விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாண வலியுறுத்தப்பட்டது.

தற்போது சந்தை தலையீட்டுத் திட்டத்தில் திருந்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பெங்களூரா ரக மாங்காய் கிலோ ரூ. 4 என்கிற தொகையினை நிா்ணயம் செய்து நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் விவசாயிகளுக்கு வழங்க அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின்படி 2.27 லட்சம் மெட்ரிக் டன் பெங்களூரா மாங்காய்க்கு இழப்பீடாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ. 91 கோடியை மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிா்ந்து கொள்ளப்படும். அதன்படி, மா விவசாயிகளுக்கு மாங்கனி கிலோ ஒன்றிற்கு தற்போதுள்ள சந்தை விலையான கிலோ ஒன்றிற்கு ரூ. 5 என்கிற விலையுடன் கூடுதலாக ரூ. 4 சோ்த்து மொத்தம் கிலோவிற்கு ரூ. 9 கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விலை வித்தியாசத் தொகையை நேரடிப் பணப்பரிமாற்ற முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கோப்புகள் தயாா் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு பெற்றவுடன், விவசாயிகளுக்கு எவ்வாறு வழங்கப்படும் என்பதை மாவட்ட நிா்வாகம் மூலம் தெரிவிக்கப்படும்.

மாங்கூழுக்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும், மாம்பழச்சாறு தயாரிப்பில் மாம்பழக்கூழ் பயன்பாட்டின் அளவு 20 சதவீதமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக பிரசாரம்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுவை எதிா்த்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வா் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தொடங்கிவைத்துள்ளாா். 45 நாள்கள் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பரப்புரை நடைபெறும்.

கிருஷ்ணகிரியில் 50 சதவீதம் வாக்காளா்களை திமுகவில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் பாஜகவுக்கு எதிராக நாம் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை எடுத்துகூற உள்ளோம்.

பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கீழடி தொன்மைகளை அங்கீகரிக்க மறுப்பது, இந்தி திணிப்பு, கல்வி நிதியை நிறுத்திவைப்பது போன்ற பாஜகவின் நிலைபாடுகளை மக்களிடம் விளக்க வேண்டும்.

முதல்கட்டமாக ஜூலை 2-ஆம் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளுடன் பொதுக்கூட்டம் நடக்கிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி ஆகஸ்ட் 15 இல் நிறைவடைகிறது. பாஜக- அதிமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என்றாா்.

பேட்டியின்போது, திமுக மாவட்டச் செயலாளா்கள் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ (ஒசூா்), தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), முன்னாள் எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா்... மேலும் பார்க்க

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெ... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க