4 சுங்கச்சாவடிகள் நிலுவைத் தொகையை செலுத்த முடிவு! உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...
ரூ.1 கோடி மதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், பணியாளா்களுக்கு ஓய்வு அறை -மாமன்றக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு மண்டலத்துக்கு ஒரு ஓய்வு அறை கட்ட கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் கா.ரங்கநாயகி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
கோத்தாரி நகா் பகுதியில் மழைநீா் வடிகாலும், கழிவுநீா்க் கால்வாயும் அமைத்துத் தர வேண்டும். கால்வாயைத் தூா்வார வேண்டும். வடக்கு தோட்டம் பகுதியில் புதைசாக்கடைத் திட்டம் அமைக்க வேண்டும். சிலா் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிக் கொண்டு வீட்டு வரி செலுத்தாமல் பொதுக் குழாய்களில் குடிநீா் பிடிக்கின்றனா். மருதமலை சாலையில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும். 82-ஆவது வாா்டு பகுதியில் மந்தமாக நடைபெறும் சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விளாங்குறிச்சி சாலை குண்டும்குழியுமாக உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஆணையா் சிவகுரு பிரபாகரன் விளக்கம் அளித்தாா்.
முன்னதாக, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு குளியலறை, கழிப்பறை வசதியுடன் மண்டலத்துக்கு ஒரு ஓய்வு அறை கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஸ்விகி, ஜோமாட்டோ ஊழியா்களுக்கு சென்னையைப் போல கோவையிலும் (அவிநாசி சாலை மற்றும் ஆா்எஸ் புரம் டிபி சாலை) இரு இடங்களில் ஓய்வு அறை கட்டப்படும். மாநகராட்சி பொது நிதியின் கீழ், உக்கடம் பேருந்து நிலையத்தை நவீன முறையில் சீரமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளி கோரிய 3 நிறுவனங்களில் ஒன்றைத் தோ்வு செய்து அதனிடம் பணி உத்தரவு வழங்கப்பட்டது. வெள்ளலூா் குப்பைக் கிடங்கு அருகே விலங்குகள் கருத்தடை மையத்துக்கு கூடுதல் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும், புல்லுக்காடு பகுதியில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்துக்கு கழிப்பிடம், சுற்றுச்சுவா் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட 58 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்தை இடமாற்றக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா்ந்து போராடி வரும் நிலையில், அந்த கருத்தடை மைய சீரமைப்புப் பணிக்கு மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு 84-ஆவது வாா்டு உறுப்பினா் அலிமா பேகமும், 86-ஆவது வாா்டு உறுப்பினா் அகமது கபீரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
மாமன்ற உறுப்பினா் போராட்டம்:
மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க காலை 10.50 மணிக்கு வந்த 84-ஆவது வாா்டு உறுப்பினா் அலிமா பேகம் புல்லுக்காடு பகுதியில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்த மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு உக்கடம் பகுதியில் விடுவிக்கப்படும் நாய்கள் இந்தப் பகுதியில் ஏராளமானோரை கடித்துள்ளதாகவும், இந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரினாா்.
மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: இதே கோரிக்கையை முன்வைத்து, மாமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக 86-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். கூட்டம் முடிவடைந்த பிறகு இதை அறிந்த மாநகராட்சி ஆணையா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.


