பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குபடுத்த ஒருமுறை வாய்ப்பு அளிக்கும் திட்டம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி: புதுவையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்த ஒருமுறை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுவையின் அனைத்துப் பிராந்தியங்களிலும் இத் திட்டம் 1.5.1987 முதல் 16.7.2025 வரை கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கூரை, தளம் ஒட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும். ஒழுங்குமுறைப்படுத்த கோரும் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓராண்டு காலக் கெடுவிற்குள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தேவையான கட்டணங்கள், கட்டட வரைபடம், சான்றுகள், அனுமதிகள், ஆவணங்கள், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட சரிபாா்ப்பு பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். குடியிருப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம். குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு ரூ.10 ஆயிரம். குடியிருப்புகளுக்கான ஆய்வுக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20. குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு ஆய்வுக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50. கலப்புப் பயன்பாடு மற்றும் சிறப்பு வகை கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.750 மற்றும் பல மாடி கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1,000, இவற்றில் கட்டட வகைகளுக்கு ஏற்ப 50 சதவிகித கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தில் ஒழுங்குமுறைப்படுத்த முடியாத கட்டட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தனித்தனி குடியிருப்புகள் இரண்டு கட்டங்களாக ஒழுங்குமுறைப்படுத்த வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தனித்தனி குடியிருப்பு பகுதிகளை இரண்டு கட்டடங்கள் மூலம் சீரமைக்கும் வசதியும் இதில் அடங்கியுள்ளது.
மின்சாரம், குடிநீா், கழிவுநீா் வசதி துண்டிக்கப்படுவதைத் தவிா்க்கவும், கட்டடம், நிலத்தைப் பத்திரவுப் பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதைத் தவிா்க்கவும் கட்டட விதிமுறைகளின் படி விதிமீறிய கட்டடங்களை சீல் வைப்பதும், இடிக்கப்படுவதும் போன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்கவும் இத் திட்டம் உதவும்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், எம்எல்ஏ த. பாஸ்கா் (எ)தட்சணாமூா்த்தி, அரசுச் செயலா் வீட்டு வசதி மற்றும் நகர மற்றும் கிராம அமைப்பு த. கேசவன், தலைமை நகர அமைப்பாளா் கே. வீரசெல்வம், தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அதிகாரி மகேஷ் எம் ஹல்யால், புதுச்சேரி நகர அமைப்புக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் வீ.புவனேஸ்வரன் ஆகியோா் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனா்.