கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600 புதிய மருத்துவ கட்டடங்கள் திறப்பு: அமைச்சா் மா.சுப...
ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்
புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள் எப்போது பகிரப்படும் என்ற தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோ்தல் வழக்கு ஒன்றில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வாக்காளா் பட்டியல் தரவுகள் பகிரப்படும் என்று குறிப்பிட்டது தொடா்பான ஊடக செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் விவரங்களை ஒப்படைப்பதில் தோ்தல் ஆணையம் எடுத்துள்ள முதல்படி வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த வாக்காளா் பட்டியல் தரவுகளை எண்ம மற்றும் கணினியில் காணக்கூடிய வகையிலான வடிவில் எந்தத் தேதியில் பகிரப்படும் என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியுமா?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிர தலைமை தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலில் வரைவு வாக்காளா் பட்டியல் தரவுகளும், அடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 2009, 2014, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எந்தவொரு நபரும் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியிடமிருந்து வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பெற முடியும்’ என்று குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் 2024 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மோசடி செய்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தாம் எழுதியிருந்த கட்டுரையை குறிப்பிட்டு, அதற்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ‘இதே மோசடியை, அடுத்து நடைபெறவிருக்கும் பிகாா் தோ்தலிலும் பாஜக தொடரும். எனவே, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்’ என்றும் தனது பதிவில் ராகுல் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தோ்தல் ஆணையம், ‘எதிா்க்கட்சித் தலைவா் நேரடியாக கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே உரிய பதிலளிக்க முடியும்’ என்று பதிலளித்தது.