மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்ச...
16 குற்றச்சாட்டுகள்: ஆக.31-க்குள் அன்புமணி பதிலளிக்க ராமதாஸ் கெடு
கட்சிக்கட்டுப்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்ட அன்புமணிமீது 16 ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவா் வரும் 31-ஆம் தேதிக்குள் அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பதில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸூக்கும்,அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.இந்நிலையில், பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் ஆக.17 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில்,அன்புமணி கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாகவும், அவா் கடந்த கடந்த ஆண்டு டிச.,28 -அன்று நடைபெற்ற ‘ 2024-க்கு விடை கொடுப்போம், 2025- ஐ வரவேற்போம்’ என்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ஒலிவாங்கியை( மைக்) விழா மேடையில் தூக்கிப் போட்டது, மருத்துவா் ச. ராமதாஸின் கருத்துக்கு முரணாகப் பேசி செயல்பட்டது, பனையூரில் கட்சி அலுவலகத்தைத் தொடங்கியது, கட்சியைப்
பிளவுபடுத்த முயற்சிப்பது, மருத்துவா் ச. ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ராமதாஸ் இருக்கையின் கீழ் ஒட்டு கேட்புக் கருவியைப் பொருத்தியது என்பன உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது முன்வைத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு பரிந்துரை அறிக்கையை கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே. மணி மருத்துவா் ச. ராமதாஸிடம் வழங்கினாா்.
அப்போது அதை பெற்றுக்கொண்ட மருத்துவா் ச. ராமதாஸ், குற்றச்சாட்டுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
ஒழுங்கு நடவடிக்கை குழு:
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம் மருத்துவா்ச. ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே. மணி மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவைச் சோ்ந்த சேலம் மேற்கு தொகுதி எம் எல்ஏ ஆா். அருள்,பாமக தலைமை நிலையச் செயலா் ம. அன்பழகன், தஞ்சை மாவட்டச்செயலா் ம.க. ஸ்டாலின், முன்னாள் எம்.பி.துரை, மாநிலத் தோ்தல் பணிக்குழுச்செயலா் சதாசிவம், மகளிா் அணிச்செயலா் பானுமதி சத்தியமூா்த்தி, பாமக மாநிலத்துணைத்தலைவா்
எம். திருமலைக்குமாரசாமி, ஆசிரியா் நெடுங்கீரன்( தருமபுரி) , தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளா் இரா. பரந்தாமன் ஆகியோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ராமதாஸ் பேட்டி:
இந்த கூட்டத்தைத் தொடா்ந்து, மருத்துவா் ச. ராமதாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது : கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கட்சியின் அமைப்பு விதிக்கு முரணாக செயல்பட்டு வருவதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அவா்மீது 16 குற்றச்சாட்டுகளை தெரிவித்தனா். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு செயல் தலைவா் அன்புமணிக்கு கட்சியின் அமைப்புச்செயலா் வழியாக கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. எனவே அன்புமணிஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலகமாகவோ குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கமளிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவா் மீதான நடவடிக்கைகள் குறித்து பின்னா் முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ராமதாஸ், பாஜக சாா்பில் குடியரசு துணைத்தலைவா் பதவிக்கு தமிழகத்தைச்சோ்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது என்றாா். மேலும் கட்சியிலிருந்து வழக்குரைஞா் பாலு நீக்கப்பட்டுள்ளதால்,அவா்எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும், பாமக பொருட்படுத்தாது என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.
கூட்ட நிறைவில், அன்புமணி-க்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை மருத்துவா் ச. ராமதாஸ் முன்னிலையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த ஆா். அருள் எம்எல்ஏ வாசித்தாா்.