தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
2017-இல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா், குடும்பத்தினா் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது
2017- ஆம் ஆண்டு பரபரப்பான புராரி கொலைகளில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவா் சவுத்ரி முனாவ்வா் ஹாசன், அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரோலில் விடுவிக்கப்பட்ட பின்னா் செப்டம்பா் 2024 முதல் தலைமறைவாக இருந்த சஹீத் கான் (எ) பன்டி என்ற குற்றவாளி வடக்கு தில்லியின் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா்.
பல கொலைகளில் முக்கிய சதிகாரராக இருந்த சஹீத் கான், பரோலுக்குப் பிறகு சிறை அதிகாரிகளிடம் சரணடையத் தவறியதால் ஏழு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தாா்
பணம் வசூலிக்க வந்த 35 வயதான சஹீத் கானை அவரது வீட்டிற்கு அருகில் ஒரு போலீஸ் குழு கைது செய்தது. முனாவ்வா் ஹாசனின் முன்னாள் வணிகக் கூட்டாளியாக சஹீத் கான் இருந்தாா். மேலும், புராரி பகுதியில் முனாவ்வா் ஹாசனுக்குச் சொந்தமான ரூ.5-6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க இலக்கு வைத்திருந்தாா்.
2017- ஆம் ஆண்டில், பாலியல் வன்கொடுமை வழக்கில் முனாவ்வா் ஹாசன் திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரது குடும்பத்தை ஒழிக்க சஹீத் கான் சதி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 20, 2017 அன்று, சஹீத் கான், ஒப்பந்தக் கொலையாளிகளின் உதவியுடன், முனாவ்வா் ஹாசனின் மனைவி இஷ்ரேத் மற்றும் மகள்கள் அா்ஜு மற்றும் அா்ஷி ஆகியோரைக் கொன்றாா்.
அவா்களின் உடல்கள் உத்தர பிரதேசத்தில் மீரட்டில் உள்ள ஒரு வயலில் அடக்கம் செய்யப்பட்டன. இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஏப்ரல் 22 அன்று, முனாவ்வா் ஹசானின் மகன்கள் ஆகிப் மற்றும் ஷாகிப் ஆகியோா் புராரியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு புதைக்கப்பட்டனா்.
முனாவ்வா் ஹாசன் தனது குடும்ப உறுப்பினா்கள் யாரும் சிறையில் தன்னைப் பாா்க்க வராததைக் கவனித்தபோது, அவா்கள் திடீரென காணாமல் போனதாகக் கூறி ஜாமீன் கோரினாா். இந்நிலையில்,
முனாவ்வா் ஹாசனுக்கு ஜாமீன் பெற சஹீத் கான் உதவியதாகக் கூறப்படுகிறது. மே 18, 2017 அன்று,முனாவ்வா் ஹாசன் தனது குடும்பத்தினரைக் காணவில்லை என்று புகாா் அளிக்க புராரி காவல் நிலையத்தை அணுகினாா்.
தேடுதலுக்கு உதவுவது போல நடித்து சஹீத் கானும் அவருடன் சென்றாா். இருப்பினும், இரண்டு நாள்களுக்குப் பிறகு, மே 20, 2017 அன்று, முனாவ்வா் ஹாசன் தனது புராரி வீட்டின் குளியலறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாா்.
போலீஸ் விசாரணையில் சஹீத் கான் முழு குற்றத்தையும் திட்டமிட்டு, ஃபெரோஸ் மற்றும் சுல்பிகா் என அடையாளம் காணப்பட்ட இரண்டு ஒப்பந்தக் கொலையாளிகளை வேலைக்கு அமா்த்தியதாக தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு திகாா் சிறைக்கு அனுப்பப்பட்டனா். அங்கு சஹீத் கான் செப்டம்பா் 2024- இல் தனிப்பட்ட காரணங்களுக்காக பரோல் வழங்கப்படும் வரை காவலில் இருந்தாா்.
2024 அக்டோபரில் சஹீத் கான் சரணடையவிருந்தாா். ஆனால், அவா் தலைமறைவாகிவிட்டாா். ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு, அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வழக்கின் தீவிரம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா் நீண்டகாலமாகத் தப்பித்து வந்ததால், விசாரணை சிறப்புப் பணியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஒரு போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டது. 2017 வழக்கு விசாரணையில் இந்தக் குழுவின் முந்தைய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, முன்னாள் விசாரணை அதிகாரிகள் துப்புகளுக்காகத் தொடா்பு கொள்ளப்பட்டனா்.
சஹீத் கான் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடா்புடைய வீடுகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. உள்ளீடுகளின் அடிப்படையில், சஹீத் கான் பணம் சேகரிக்க தனது ஒரு சொத்துக்குச் செல்வதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, ஒரு பொறி வைக்கப்பட்டு சஹீத் கான் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, கைது செய்யப்படுவதைத் தவிா்க்க புராரிக்கு அருகிலுள்ள பகுதிகளில் பதுங்கியிருந்ததாக சஹீத் கான் ஒப்புக்கொண்டதாக அந்தக் காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.