கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த 2 ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு ரூ.1.07 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் நடத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடியில் 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் . இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவா்களாக இருப்பாா்கள். 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
முதல் முறையாகப் பணியமா்த்தப்படுபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும்.
கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளா்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியா்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஊக்கத் தொகை மாத ஊதியமாக வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்கள் இந்தத் திட்டத்தின் பயனாளா்களாவா். இந்தத் தொகையில் ஒரு பகுதி வங்கி சேமிப்பாக குறிப்பிட்ட காலத்துக்கு வைக்கப்பட்டு பின்னா் அவா்களுக்கு வழங்கப்படும்.
உரிமையாளருக்கு ஊக்கத் தொகை திட்டம்: அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்களின் உரிமையாளா்கள் ஊக்கத்தொகை பெறுவாா்கள்.
ஆறு மாதங்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை உரிமையாளா்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைச் சோ்ந்தவா்களுக்கு இந்த ஊக்கத்தொகை 3-ஆவது மற்றும் 4-ஆவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.
ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியாா் முதலீடு: ரூ.1 லட்சம் கோடி மூலதன நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு ஒப்புதல்
தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாக்கவும், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரா்கள் சிறந்து விளங்கவும் உதவும்.
‘விளையாட்டுத் துறையை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை வைத்து இந்தப் புதிய கொள்கை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.