``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?
உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டிஷனிங் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அங்கு கடுமையான வெப்பம் ஏற்பட்டு மூச்சு திணறல் அளவுக்கு சென்றதாக மணமகள் கூறியுள்ளார்.

”இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்த இடம் மனிதாபிமானமற்ற சூழல்” என்று கூறி ஏர் கண்டிஷனரை ஏற்பாடு செய்யுமாறு மணமகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் இரு குடும்பத்தினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி பெரும் வாக்குவாதம் ஏற்பட, இந்த விவாகரத்தில் போலீஸ் தலையிடும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "தனக்கு மரியாதை இல்லாத, அடிப்படை வசதி ஏற்பாடு செய்ய முடியாத ஒரு வீட்டில் தனது வாழ்க்கை நரகமாக மாறும் என்று மணமகள் தனது பெற்றோரிடம் கூறி, திருமணம் செய்ய மறுத்துள்ள்ளார்" என்று தெரிவித்தனர்.
சமரச பேச்சு வார்த்தைகள் செய்ய முயன்றும், அது தோல்வியில் முடிந்துள்ளது. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடைபெறயிருந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
மேலும் மணமகனின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்பதாக கூறி மணமகளின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.