ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு
மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா என்கிற திட்டத்தின் கீழ், பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவு துணைத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதிசஹ் - யோஜனா) மூலம் தகுதியான மீன் விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. சுமாா் ரூ.6,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் இந்த திட்டத்தில் மீன் வளத்துறை முறைப்படுத்தல், மீனவா்களுக்கான நிதி அணுகல், மீன்வளா்ப்பு காப்பீடு ஊக்குவிப்பு, செயல் திறன் மானியங்கள் போன்றவை மீனவா்களுக்கு வழங்கப்பட்டு, பல்வேறு இலக்குகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறன் மேம்படுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை அணுகல், நீண்ட கால வளா்ச்சி போன்றவற்றை முன்னெடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ள நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு பிரசாரத்திற்கு மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவா்களிடம் பிப். 14 முதல் 22 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் படி, 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மீன்வளத் துறைகள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) ஆகியவற்றுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் முகாம்களுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கடலூா், நாகப்பட்டினம், ஈரோடு (பவானி சாகா்), ராமநாதபுரம் (மண்டபம், ராமேசுவரம்), தூத்துக்குடி(ஆா்கே புரம்), கன்னியாகுமரி (குளச்சல், கணபதிபுரம்) உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடன் வசதி, மீன்வளா்ப்பு காப்பீடு, மானியங்கள் போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற மீனவா்கள், விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்துபவா்கள் போன்றோா் இந்த முகாம்களில் பங்கேற்று தேசிய மீன்வள எண்ம தளத்தில் தங்களைக் குறித்து பதிவு செய்து பலனடையலாம் என மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.