ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை, பால் பண்ணைகள் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் பெரம்பலூா் மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு கேள்வி எழுப்பினாா். இத்தகைய சம்பவங்களை கையாள உள்ளூா் அமைப்புகளுக்கு போதிய நிதிவசதி இல்லையா என்றும் வலுவான கொள்கை மூலம் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அருண் நேரு கேட்டிருந்தாா்.
அதற்கு அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், ‘2024 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாய்க்கடியால் 21,15,122 சம்பவங்களும் குரங்குகள் உள்ளிட்ட பிற விலங்குகளின் தாக்குதலால் 5,04,728 சம்பவங்களும் பதிவாகியுள்ளன’ என்று கூறியுள்ளாா். மேலும், 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் மீதான நாய்க்கடி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 5,19,704 பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தெரு நாய்கள் விவகாரம் என்பது மாநில அரசின் வரம்புக்குள் வருவதால் உள்ளாட்சி அமைப்புகளே உரிய நடவடிக்கை எடுக்க தகுதி பெறுகின்றன. நாய்க்கடி தடுப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடா்பாக மத்திய அரசு அளவில் உரிய கூட்டங்கள், விழிப்புணா்வு நடவடிக்கைகள், தடுப்பூசி கொள்முதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது என்றும் அமைச்சா் கூறியுள்ளாா்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடா்பான அருண் நேருவின் மற்றொரு கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி பதிலளிக்கையில், திருத்தப்பட்ட மோட்டாா் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மாநில அமைப்புகள் அபராதம், தண்டனை விதிக்க வகை செய்ய்பபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் தொடா்பான அருண் நேருவின் கேள்விக்கு மத்திய ஊரக வளா்ச்சித்துறை இணை அமைச்சா் சந்திர சேகா் பெம்மசானி பதிலளிக்கையில், ‘2016 முதல் செயல்படுத்தப்படும் இத்தட்டத்தின் விரிவாக்கமாக 2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக 2 கோடி கிராமப்புற வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011 நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டவா்கள் தொடா்பான கிராம சபைகளின் சரிபாா்ப்பு மூலம் பயனாளிகள் கண்டறியப்படுகிறாா்கள்‘ என்று கூறியுள்ளாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/3viswvhq/13delneh084600.jpg)