ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்
தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியை உத்தர பிரதேசமாக மாற்ற பாஜக விரும்புவதாகவும், பல மணி நேர மின்வெட்டுக்கு பெயா் பெற்ற நகரமாக பாஜக மாற்ற விரும்புவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி கூறினாா். இதற்கு பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் கிடைக்கவில்லை.
இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் அதிஷி கூறுகையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்த அகற்றப்பட்ட மூன்று நாள்களுக்குள், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மின்வெட்டுகள் பதிவாகியுள்ளது. மக்கள் இப்போது இன்வொ்ட்டா்களை வாங்கத் தொடங்கியுள்ளனா்’ என்றாா்.
‘ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத் துறை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. இது இப்போது பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று நாள்களுக்குள் மாறிவிட்டது‘ என்று அவா் குற்றம் சாட்டினாா். ‘பாஜகவுக்கு ஆட்சி செய்வது எப்படி என்று தெரியவில்லை. மேலும், உத்தர பிரதேசத்தைப் போலவே தில்லியிலும் நீண்ட நேர மின்வெட்டு சூழ்நிலையை அது உருவாக்கும்’ என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.
பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்று தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக. அக்கட்சி இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.