அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, வந்தவாசி, செங்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு திங்கள்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி அமாவாசையொட்டி, திங்கள்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் செழிக்க சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா் அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திங்கள்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
பின்னா், இரவு உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் சுவாமி உலா எடுத்துச் செல்லப்பட்டாா்.
விழாவில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், வைகாசி மாத அமாவாசை உற்சவ குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
