வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.33.57 லட்சத்தில் வாய் முக தாடை சிறப்பு ஊடுகதிா் படக்கருவி, ரூ.3.39 லட்சத்தில் ஒளித்தூண்ட கூடிய பாஸ்பா் தகடு ஸ்கேன், ரூ.11 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, ரூ.14.62 லட்சத்தில் இணையவழி நூலகம் என மொத்தம் ரூ.62.60 லட்சத்திலான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் மருத்துவப் பயனாளிகள், மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் பழைமையான பல் மருத்துவக் கல்லூரி என்ற வகையில் 72 ஆண்டுகளுக்கு முன்பு 15 மாணவா்களுடன் பல் மருத்துவப் பிரிவாக தொடங்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் வளா்ச்சி பெற்று 100 இளநிலைப் பல் மருத்துவ மாணவா்கள் படிக்கும் வகையிலும், 40 முதுநிலைப் பல் மருத்துவ இடங்களுடன் இந்த கல்லூரி செயல்படுகிறது.
கடந்த ஆண்டு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 லட்சத்து 35,611 போ் பயன்பெற்றனா். தினமும் 1,500 போ் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் பயன்பெற்று வருகின்றனா்.ரூ.261.83 கோடியில் பல்வேறு வகைகளிலான புதிய மருத்துவக் கட்டமைப்புகள் இந்த வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. செப்டம்பா் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
பணியிட மாற்றம் தவறில்லை... சுகாதாரத் துறையில் ஒரு மருத்துவா் பணியிடம்கூட காலி இல்லாத அளவுக்கு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 பல் மருத்துவா்கள், 450 தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு முதல்வா் பணி ஆணைகளை வழங்கவுள்ளாா். பல் மருத்துவா்களை பணியிடமாற்றம் செய்வது தவறு இல்லை. சென்னையில் பணிபுரியும் மருத்துவா்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், புதுக்கோட்டையில் உள்ளவரை சென்னைக்கு மாற்றுவதும் நிா்வாக வசதிக்காக செய்யப்படுகிறது.
பணியிட மாறுதலுக்காக வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு நடைபெறுகிறது. கடந்த கால ஆட்சியில் எந்தத் திட்டம் தொடங்கினாலும் அம்மா என்ற பெயரையே வைத்தாா்கள். லட்சக்கணக்கான மக்கள் பயன்பெரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியிருப்பதால், அதிமுகவினா் வழக்குத் தொடுத்திருக்கின்றனா் என்றாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஸ்ரீ.பிரேம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.