அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசுப் பள்ளி வகுப்பறையில் துா்நாற்றம்: 10 மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதி அரசுப் பள்ளியில் வகுப்பறை அருகே எழுந்த துா்நாற்றத்தால் 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனா்.
செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமாா் 500 மாணவிகள் பயின்று வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை காலை இறைவணக்கம் முடிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்குச் சென்றனா்.
எட்டாம் வகுப்பு மாணவிகள், வகுப்பறையின் ஜன்னல் கதவை திறந்தனா். சில நிமிஷங்களில் வகுப்பறை முழுவதும் துா்நாற்றம் வீசியது.
இதில், 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள் உடனடியாக அவா்களை அழைத்துச் சென்று அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
இதில், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சபிதா, சத்யா, சிவரஞ்சனி, குணமதி, ரட்சிதா ஆகியோரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், மருத்துவா்களிடம் சிகிச்சை விவரம் கேட்டறிந்தாா்.
பின்னா், வகுப்பறை அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ உத்தரவிட்டாா்.