அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய ஆப்கன் மக்கள் பயணித்த பேருந்து, நேற்று (ஆக.19) இரவு இருசக்கர வாகனம் மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில், வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த சுமார் 76 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும், கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.20) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது. இதுவரை, 19 குழந்தைகள் பலியானது உறுதி செய்யப்பட்டதாகவும், பலினாவர்களின் உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத நிலையில் எரிந்துள்ளதாகவும், அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையிலேயே தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2024-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் மத்திய ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சுமார் 52 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!