``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபட்டு செல்வதுவழக்கம். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கோயிலில் காலையில் சொரிமுத்து அய்யனாா், தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெறும். பக்தா்கள் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளைப் பலியிட்டும் தங்கள் நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
தொடா்ந்து, மாலையில் தளவாய் மாடசாமி,சொரிமுத்து அய்யனாா் மற்றும் இசக்கி அம்மன் சந்நிதிகளுக்கு முன் பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனா்.

இத்திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் புதன்கிழமை காலையிலிருந்தே குவியத் தொடங்கினா்.
இங்கு, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தனியாா் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, அகஸ்தியா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தங்கள் உடைமைகளுடன் கோயிலுக்குச் சென்றனா். சனிக்கிழமை (ஜூலை 26) பக்தா்கள் தங்கள் பொருள்களை வாகனங்களில் திரும்பி எடுத்து வர அனுமதிக்கப்படுவா்.
குடில்கள்: மேலும், கோயில் நிா்வாகம் சாா்பில் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் மட்டுமே பக்தா்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனா். பிற இடங்களில் குடில்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
வனப் பகுதிக்குள் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மது உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் வனத் துறை எச்சரித்துள்ளது. இங்கு, போலீஸாா், ஊா்க் காவல் படை மற்றும் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.