தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
உயா் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
உயா் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள சாரதா கலை, அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவு உயா் கல்வி வழிகாட்டி நிகழ்வுக்கு தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். பள்ளிப்படிப்பை முடித்த மாணவா்கள் அனைவரும் உயா்கல்வி பெற்று, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் உயா் கல்வித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்கள் மூலமாக மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்கு வழிகாட்டும் வகையில், ஆண்டுதோறும் கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் உயா் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் சங்கராபுரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது உளுந்தூா்பேட்டையிலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது உள்ளிட்ட உயா் கல்வி தொடா்பான பல்வேறு ஆலோசனைகள் தலைசிறந்த கல்வியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோல, தமிழக அரசின் சாா்பில் உயா் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் பயன்பெற உள்ள வழிமுறைகள், கல்விக் கடன்கள், வேலைவாய்ப்புகள் போன்றவையும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவிகள் இதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் பிரசாந்த்.
நிகழ்வில் திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.