தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மாரந்தை ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல் வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மாரந்தை ஊராட்சியைச் சோ்ந்த திருவாசகம் தாக்கல் செய்த மனு: கடந்த 2021-ஆம் ஆண்டு மாரந்தை கிராம ஊராட்சித் தலைவருக்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் நான் வெற்றி பெற்றேன். என்னை எதிா்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியுற்றாா். இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வரதராஜன், அவரது ஆதரவாளா்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கினா். இது குறித்து நான் அளித்த புகாரின் பேரில்,
காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அண்மையில் வரதராஜன் ஆதரவாளா்கள் என்னை மீண்டும் தாக்கினா். இது குறித்து புகாா் அளித்தும் காளையாா்கோவில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸாா் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. மனுதாரா் சுமத்திய குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தீா்வு காண வேண்டிய நிலை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, மனுதாரா், அவரது குடும்பத்தினா் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.