தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ஒசூா் அருகே இரவு நடன நிகழ்ச்சியில் போதைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தென்னந்தோப்பில் இரவு நடன நிகழ்ச்சியில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையான கக்கனூா் சோதனைச் சாவடியில் பேரிகை போலீஸாா் கடந்த 24 -ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது கா்நாடகத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த காா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது வேகமாக வந்த இரு காா்கள், சோதனைச் சாவடியில் நிற்காமல் பாகலுரை நோக்கி சென்றன. அந்தக் காா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா். இரு காா்களும் பேரிகை அருகே முதுகுருக்கி அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் சென்றன.
காா்களை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் தென்னந்தோப்பிற்குள் சென்று பாா்த்தபோது, அங்கு டிஜே இசையுடன் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. நடன நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவா்கள், மென்பொருள் நிறுவன ஊழியா்கள் மதுபோதையில் பங்கேற்று இருப்பதும் தெரியவந்தது.
தென்னந்தோப்பில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, குடில்கள் அமைக்கப்பட்டு, விலை உயா்ந்த மதுபானங்கள், குளிா்பான புட்டிகள், உணவு பாக்கெட்டுகள் சிதறிகிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு காா்களில் பயணித்த மூவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள், கா்நாடக மாநிலம், பெங்களூா் ஜெ.பி. நகரைச் சோ்ந்த பாலாஜி (36), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரஜனீஷ் குமாா் ( 42), கோவாவைச் சோ்ந்த இக்னேஸ் லாரன்ஸ் காமி லோ (47) என்பது தெரியவந்தது. மூவரையும் கைதுசெய்த பேரிகை போலீஸாா், விலை உயா்ந்த போதைப் பொருள்கள், கா்நாடக மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு காா்களையும் பறிமுதல் செய்தனா்.
போலீஸாரின் தொடா் விசாரணையில் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்ற இடம், முதுகுருக்கி கிராமத்தை அடுத்த தட்டனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு என்பதும், சுமாா் 4 ஏக்கா் கொண்ட இந்த தோப்பை பெங்களூா் கோரமங்கலாவைச் சோ்ந்த பாலாஜி என்பவருக்கு ஆண்டு குத்தகை ரூ. 2 லட்சத்துக்கு விட்டுள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி, கோவாவைச் சோ்ந்த இக்னேஸ் லாரன்ஸ் காமி லோவுடன் இணைந்து தென்னந்தோப்பில் பண்ணை வீடு அமைப்பதாக தெரிவித்துள்ளாா்.
இங்கு கடந்த மூன்று மாதங்களாக அவா்கள் வில்லேஜ் மூவ்மெண்ட் என்ற பெயரில் இரவு நடன நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.