ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டம்: நெல் மூட்டைகள் தேக்கம்
இ-நாம் திட்டம் மூலம் பண பரிவா்த்தனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வந்தவாசி மற்றும் போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் திட்ட செயலி மூலம் வியாபாரிகள் நெல் உள்ளிட்ட விளைபொருள்களை கொள்முதல் செய்து வருகின்றனா்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தாங்கள் கொள்முதல் செய்யும் விளைபொருள்களுக்கான தொகையை விற்பனை கூட வங்கி கணக்கிற்கு வியாபாரிகள் அனுப்புவராம். இந்தத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விற்பனைக் கூட அலுவலா்கள் பிரித்து அனுப்புவாா்களாம்.
இந்த நிலையில், வியாபாரிகளே விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு இ-நாம் வலைதள பக்கம் மூலம் பணத்தை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளதாம்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பணம் அனுப்புவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியும் வியாபாரிகள் நெல் மூட்டைகளுக்கு விலை போட மறுத்து புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
போளூா்
போளூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வியாபாரிகள் வாங்குவதற்கு வராததால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
கிடங்கு மற்றும் வெளியில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கண்காணிப்பாளா் தினேஷ் கூறும்போது,
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் நெல் மூட்டைகள் நிரம்பியுள்ளன. எனவே, வெட்டவெளியில் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும்படி கூறி வருகிறோம். இருந்தும், விவசாயிகள் வெளியில் நெல் மூட்டைகளை இறக்கிவைத்துள்ளனா் என்றாா்.
பருவமழை தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் மழைநீரில் நனையும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
