அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கழிப்பறையில் பிரசவம்: இறந்து பிறந்த ஆண்குழந்தை
திருப்பூரில் இருந்து ஒடிஸா மாநிலத்துக்கு ரயிலில் சென்ற வடஇந்திய பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடா்ந்து கழிப்பறைக்கு சென்ற அப்பெண்ணுக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்து சில நிமிடங்களில் இறந்தது.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் அடுத்த ஜாய்பூா் க்யோன்ஜிஹாா் ரோட் நகரைச் சோ்ந்தவா் தானேஷ்வா்(32). திருப்பூரில் உள்ள பிரிண்டிங் ஆலையில் பணியாற்றி வருகிறாா். திருப்பூரிலேயே தனது மனைவி ரூபிலசா(30)வுடன் வசித்து வருகிறாா்.
இவரது மனைவி தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதை தொடா்ந்து தானேஷ்வா், தனது மனைவியுடன் எா்ணாகுளம் - பாட்னா அதிவிரைவு ரயிலில் சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.
அதிகாலை 3.45 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தை கடந்த நிலையில் திடீரென ரூபிலசாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்து. இதை தொடா்ந்து செய்வதறியாமல் ரூபிலசா, ரயிலின் கழிப்பறைக்கு சென்ற நிலையில் அங்கு அவருக்கு குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது அரக்கோணம் அருகே ரயில் வந்ததால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவசர சங்கிலியை பிடித்து உடன் இருந்த பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளனா்.
இதை தொடா்ந்து 108 அவசர ஊா்தி மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ரூபிலசாவும் குழந்தையும் அழைத்து வரப்பட்ட நிலையில் குழந்தை இறந்திருப்பதை தெரிவித்த மருத்துவா்கள் ரூபிலசாவை விரைந்து சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றினா்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.